Monday, October 8, 2012

'மரணம் உயிரைத்தான் பிரிக்கும், காதலையல்ல!!!


ஒரு சின்னக் கதை...

உயிருக்குள் உயிர் பொதிந்த காதலர்கள் அவர்கள். எல்லா காதலர் தினத்திலும் காதலிக்கு ஸ்பெஷல் பூங்கொத்தை பரிசளிப்பான் காதலன். காதல் வளர்ந்து திருமணமானது. வருடங்கள் வளர வளர காதலும் வளர்ந்தது. பூங்கொத்தும், பிரியமும் தொடர்ந்தது. இந்தக் காதலை மரணம் கூட பிரிக்கக் கூடாதென மன்றாடினர் இருவரும். ஆனால் ரணத்தின் தேரேறி மரணம் ஒருநாள் வந்தது. காதலன் மறைந்தான், காதலி உறைந்தாள்.

அடுத்த காதலர் தினம் துயரத்துடன் வந்தது. அவளுடைய அழுகை அணை உடைத்தது. அவனில்லாத முதல் காதலர் தினம் அது. படுக்கையில் புரண்டு கண்ணீர் விட்டாள். திடீரென கதவு தட்டும் ஓசை. வாசலில் பூங்கொத்துடன் ஒருவன். பூங்கொத்தை வாங்கினாள்.

இறந்து போன காதலன் அனுப்பியிருந்தான்.

பூங்கொத்தில் ஒரு வாசகம். 'மரணம் உயிரைத்தான் பிரிக்கும், காதலையல்ல. நான் உன்னை நேசிக்கிறேன்'.

அவளுக்கோ கோபம்.

பூ அனுப்பிய கடைக்காரரிடம் சென்றாள்.

'வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகிறாயா?' என சீறினாள்.

அவன் நிதானமாய்ச் சொன்னான்.

'அம்மா, உங்க வீட்டுக்காரர் ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே ஒரு அக்ரீமென்ட் போட்டுக்கிட்டாரு. எல்லா காதலர் தினத்துக்கும் உங்க வாசலில் ஒரு பூங்கொத்து வைக்கச் சொல்லி பணம் கொடுத்தாரு. ஒருவேளை நான் நேரடியா கடைக்கு வந்து பூ தேர்வு செய்யலேன்னா, நான் இறந்துட்டேன்னு அர்த்தம். ஆனாலும் நீ பூங்கொத்து கொடுக்கிறதை நிறுத்தக் கூடாது. ஒருவேளை மரணம் வந்து அவளையும் சந்தித்தால் கடைசியாய் ஒருமுறை அவள் கல்லறையில் பூங்கொத்தை வை.

எப்போதும் கடிதத்தில் தவறாமல் எழுது - 'மரணம் உயிரைப் பிரிக்கும், காதலையல்ல'... என்று.

இதாம்மா நடந்தது' அவன் சொன்னான்.

அவள் அழுதாள். அவளுடைய கண்ணீர்த் துளிகள் காதலில் கரைந்து பெருமிதம் அடைந்தன.

உண்மைக் காதல் ஆழமானது.
காதலின் உண்மை வேர்களில் தெரியும், பூக்களில் அல்ல.
போலிகளைப் புறக்கணியுங்கள்.
உயிரில் உலவும் உண்மை
அதுவே காதலின் தன்மை!

No comments:

Post a Comment