Monday, July 15, 2013

பொடுகு தொல்லையா?

பொடுகு தொல்லையா? தேங்காய் பால் - 1/2 கப், எலுமிச்சை சாறு - 4 தேக்கரண்டி, வெந்தயம் சிறிதளவு ஊறவைத்து அரைத்து மூன்றையும் ஒன்றாக கலந்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கும். கூந்தல் நுனி வெடிக்காமல் நீளமாக வளரும். அருகம்புல்லின் சாறர தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி ஆறவைத்துத் தலையில் தேய்த்து வந்தால் தலையில் அரிப்பு நீங்கி பொடுகு வராமல் காக்கும். வெள்ளை மிளகு 4 தேக்கரண்டி, வெந்தயம் 2 தேக்கரண்டி இரண்டையும் காய்ச்சாத பசும்பாலில் அரைத்து தடவி அரை மணி நேரம் ஊறவிட்டு குளித்து வந்தால் பொடுகு நீங்கும். சின்ன வெங்காயத்தைத் தோல் நீக்கி அரைத்துத் தலையில் தடவி அரைமணி நேரம் கழித்துக் குளித்தால் நல்லது. வசம்பை நன்கு தட்டி நல்லெண்ணெயில் நன்றாக கருகும் வரை கொதிக்க வைத்து அதை வடிகட்டித் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் பூசி வந்தால் முடி உதிர்வது நீங்கும். பசலைக் கீரையை அரைத்துத் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு நீங்குவதுடன் கண்டிஷனராகவும் இருக்கும். இதில் ஒன்றை பயன்படுத்திப் பொடுகை நீக்கி அழகான நீண்ட கூந்தலைப் பெறுங்கள். நீங்களும் அழகுடன் திகழ்வீர்கள்.

வாய்வுப் பிடிப்பு மற்றும் சுளுக்கு..!

வாய்வுப் பிடிப்பு மற்றும் சுளுக்கு..! வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு இரண்டுக்கும் நாட்டு வைத்தியத்துல முழுமையான நிவாரணம் இருக்கு. இதுக்கான மருத்துவத்தைப் பார்க்கலாமா? ஒரு கைப்பிடி முடக்கத்தான் இலையை எடுத்து, 3 டம்ளர் தண்ணியில போட்டு கொதிக்க வைக்கணும். அதை அரை டம்ளரா சுண்ட வச்சு பெரியவங்களுக்குத் தரலாம். சின்னக் குழந்தைகளுக்கு அரை பாலாடை கொடுத்தாப் போதும். ஒருமுறை இதை சாப்பிட்டு வந்தாலே பிரச்னை சரியாகிடும். மேல சொன்ன மருந்தை சாப்பிடுறதோட, இப்ப சொல்லப் போற வைத்தியங்கள்ல எது முடியுதோ அதைச் செஞ்சீங்கன்னா, சுளுக்கும் வாய்வுப் பிடிப்பும் ஓடியே போயிரும். 5 கிராம் முருங்கைப்பட்டை, ஒரு கணு சுக்கு, புளியங்கொட்டை அளவு பெருங்காயம், ஒரு டீஸ்பூன் கடுகு எடுத்து, தண்ணி விட்டு அரைச்சு, கூழான பதத்துல கரண்டியில வச்சு சூடு காட்டணும். பெறகு இளஞ்சூட்டுல அதை சுளுக்கோ, வாய்வுப் பிடிப்போ இருக்குற இடத்துல 'பத்து'ப் போடணும். இதை ராத்திரியில போட்டு, காலையில கழுவிடணும். தழுதாளை ரெண்டு கைப்பிடி அளவு எடுத்து, நாலு லிட்டர் தண்ணியில போட்டுக் கொதிக்க வைக்கணும். இந்தத் தண்ணியை பொறுக்குற சூட்டுக்கு ஆற விட்டு, வாய்வுப் பிடிப்பு இருக்குற இடத்துல தினமும் ஊத்திட்டு வரணும். வாதநாராயணன் இலையும் இதுமாதிரி கோளாறுகளை சரி பண்ணும். வாதநாராயணன் இலையை ஒரு கைப்பிடி எடுத்து, அதைப் பச்சையா அரைச்சு, வாய்வுப் பிடிப்பு/சுளுக்கு இருக்குற இடத்துல பத்துப் போட்டு 3 மணி நேரம் கழிச்சுக் கழுவணும். சுளுக்கு/வாய்வுப் பிடிப்புக்கு இந்த மூணுமே நல்ல மருந்து! அடிபட்டதால சில பேருக்கு உள்ளுக்குள்ள வீக்கம் இருக்கும். நடக்கவே கஷ்டப்படுவாங்க.. அப்படிப்பட்டவங்களுக்கு அற்புதமான மருந்து குன்றிமணி. காய்ஞ்ச குன்றிமணியோட விதைகளை ரெண்டு ஸ்பூன் அளவு எடுத்து, தோலை எடுத்துட்டு, பருப்பை மட்டும் தண்ணியில ஊற வைக்கணும். காலையில ஊற வச்சதை சாயங்காலம் எடுத்து அரைச்சு, இரும்புக் கரண்டியில சுட வைக்கணும். பிறகு, இதை வீக்கம் உள்ள இடத்துல, பொறுக்குற சூட்டுல தெனமும் ராத்திரி பத்து போடணும். இதை நாலு நாள் தேய்ச்சாலே வலியும் வீக்கமும் சரியாகிடும். தேவைப்பட்டா ஒரு வாரம் கழிச்சு திரும்பவும் இதே வைத்தியத்தைச் செய்யலாம். சுளுக்கு, அடிபட்ட வீக்கம்.. இந்த ரெண்டுக்கும் பிரண்டை நல்ல மருந்து. ஒரு கணு பிரண்டை, சிறு துண்டு மஞ்சள், கால் ஸ்பூன் உப்பு, புளியங்கொட்டை அளவு புளி எடுத்து, நல்லா அரைச்சு, சுட வச்சு, கூழ் பதமானதும் இளஞ்சூட்டுல பூசி வந்தா நல்ல சொகம் கெடைக்கும்.

Sunday, July 14, 2013

ஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...

ஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...

ஒரு ரூபாய் மட்டுமே செலவு செய்தால் போதும் ஈ.சி எனப்படும் வில்லங்கச் சான்றிதழை ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுத்துறை அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. பொதுவாகவே ஈ சி (EC - Encumbrance Certificate) எனப்படும் (வில்லங்க சான்றிதழ்) கிடைக்க நிறைய பேருக்கு ஒன்று ஒரு தரகரை நாட வேண்டும் அல்லது ரிஜஸ்டர் ஆபிசுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நடக்க வேண்டிய கட்டாயம்.

இனிமேல் 1 ரூபாயில் ஆன்லைனில் எடுத்துவிடலாம். அது போக இதை வீட்டுக்கு கொரியர் அல்லது ஸ்பீட் போஸ்ட்டில் கூட அனுப்பி வைக்க இந்த அரசாங்கம் ரெடி நீங்க ரெடியா?

ஈஸி எடுக்க 1 ரூபாய். முதல் வருடத்திற்க்கு 15 ரூபாயும் ஒவ்வொரு வருஷம் கூடுதல் ரெக்கார்ட் பெற 5 ரூபாய், பத்து வருடத்திற்க்கு தோராயமாக 1+15+9 = 61 ரூபாய் தான் செலவு. இதை உங்கள் வீட்டுக்கே கொரியர் செய்ய ரூபாய் 25 தான் செலவு. ஆன்லைனில் நேரடியாக தேடி பிரின்ட் அவுட் செய்து கொள்ள வெறும் 100 ரூபாய் தான் மொத்த செலவு.

இது போக ரெஜிஸ்டர் டாக்குமன்ட் காப்பி, சிட்டா அடங்கல் கூட இங்கு காப்பி கிடைக்கும். சென்னை, கடலூர், கோயம்புத்தூர்,திருச்சி, சேலம், மதுரை, தஞ்சாவூர், வேலூர் நம்ம திருநெல்வேலி அலுவலகங்களுக்கும் இது பொருந்தும். அது போக ஆங்கிலத்திலும், தமிழிலும் ஃபார்ம் ஃபில் செய்யலாம்.

அது போக பதிவு திருமண சான்றிதழ் கூட உங்களுக்கு இங்கே ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்யலாம். அதற்கு சார்ஜ் 1ருபாய். கொரியரில் அனுப்ப ஒரு காப்பிக்கு 2 ரூபாய் மற்றூம் கொரியர் சார்ஜ் 25 ரூபாய் மட்டுமே.

அது போக சிட் கம்பெனிகள், சொசைட்டிகளின் டாக்குமென்ட்களை பற்றி தெரிந்து இன்வெஸ்ட் செய்யுங்கள் அது கிடைக்க கூட ஆன்லைன் லின்க் உள்ளது

உங்களின் அரசாங்க லேன்ட் வேல்யு கைட்லைன்ஸ் பெறவும் முடியும். இதனால் நீங்கள் வாங்கும் சொத்துக்கு எவ்வளவு ஸ்டாம்ப் பேப்பர் என முன்னமே திட்டமிட முடியும்.

அதற்கான இணைய தள முகவரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஈ.சி சர்டிபிகேட் ஆங்கிலத்தில் பெற
http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=0

ஈ.சி சர்டிபிகேட் தமிழில் பெற
http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=1

டாக்குமெண்ட் ரிஜிஸ்ட்ரேசன்
http://www.tnreginet.net/igregn/webAppln/cert_document.asp

திருமணத்தை பதிவு செய்ய
http://www.tnreginet.net/english/smar.asp

சீட்டு கம்பெனி ரிஜிஸ்டர்
http://www.tnreginet.net/english/schit.asp

சொசைட்டி ரிஜிஸ்டர்
http://www.tnreginet.net/english/society.asp

லேண்ட் வேல்யூ சர்டிபிகேட் பெற
http://www.tnreginet.net/Guidelinevalue2012/gvaluemainpage2011.asp

Monday, July 8, 2013

ரியல் சிங்கம்... 'சுக்குக் காபி' சூர்யா!

சென்னை, மெரினா பீச்சில், இன்று (7/7/13) மாலை ஒரு கொடுமையான சம்பவம். எத்தனை முறை படித்துப் படித்துச் சொன்னாலும்... படிக்கும் பிள்ளைகளின் காதுகளில் மட்டும் ஏறுவதே இல்லை என்பதற்கு உதாரணமாக... கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் (நான்கு பேர் என்றும் சொல்கிறார்கள்), கடலில் இறங்கி தீவிரமாக குளித்துக் கொண்டிருந்தனர். நீண்ட நேரமாக குளித்துக் கொண்டிருந்தவர்கள், உற்சாக மிகுதியால் கூச்சல் போட்டுக் கொண்டே இருந்தனர். திடீரென்று காப்பாத்துங்க காப்பத்துங்க என்கிற குரல் கேட்க, அதையும் குஷியில் தமாஷாக கூச்சலிடுகின்றனர் என்றே புரிந்து கொண்டது கரையிலிருந்த கூட்டம். ஆனால், அங்கே சுக்கு காபி விற்றுக் கொண்டிருந்த சிறுவன் மட்டும் எதையோ உணர்ந்தவனாக சட்டென்று தன் கையிலிருந்த காபி கேனை கரையில் வைத்துவிட்டு, சிங்கமென சீறி தண்ணீருக்குள் பாய்ந்தான், அப்போதுதான் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்தது கரையிலிருந்த கூட்டம். தண்ணீரில் தத்தளித்தவர்கள் மூன்று பேருமே கிட்டத்தட்ட மயக்கமாகிவிட்ட நிலையில், ஒருவரை மட்டும் போராடி கரைக்கு இழுத்து வந்தான் அந்தச் சிறுவன். மீதமிருந்தவர்களை, கரையிலிருந்த படகைத் தள்ளிக் கொண்டு போய் அள்ளிப் போட்டுக் கொண்டு வந்தனர் படகோட்டிகள் சிலர். சிறுவனால் காப்பற்றவர் உடனடியாக சுயநினைவு பெற்றுவிட, மற்ற இருவரும் சுயநினைவற்ற நிலையில், மூச்சுபேச்சற்ற நிலையில் போலீஸின் துணையோடு ஆம்புலன்ஸ்கள் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் ஒரு மாணவர், உயிரிழந்துவிட்டதாகவும், மற்றொருவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாகவும் தகவல். நான்காவதாக ஒருவர் தானே தப்பி கரையேறி வேகமாக அங்கிருந்து சென்றவிட்டதாகவும் தகவல். தன் உயிரை துச்சமென மதித்து, ஓர் உயிரைக் காப்பாற்றிய அந்த சுக்கு காபி சிறுவனின் பெயர் எஸ்.சூர்யா. லைட்ஹவுஸ் பகுதியிலிருக்கும் மாநகராட்சி பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறான். ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் இப்படி காபி விற்பது வழக்கமாம். அவனுடைய துணிச்சலான செயலைக் கண்ட பலரும் அவனைப் பாராட்டித் தள்ளினர். அவன் கொண்டு வந்திருந்த சுக்கு காபியும் மளமளவென விற்றுத் தீர்ந்தது.