Monday, October 22, 2012

வரும்ன்னா வரும்தான்: ரமணன் அங்கிள்





'குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக இன்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய கூடும்' என்று சொல்லும் ரமணன் அங்கிளை எல்லாருமே டிவியில் பார்த்து இருப்போம். 'இப்படி மழை வரும்னு முன்னாடியே எப்படிக் கண்டுபிடிக்கிறாங்க? இதைத் தெரிஞ்சுக்க சென்னை வானிலை ஆய்வு மையத்துக்கு, சென்னை சூளைமேட்டில் இருக்கும் டி.டி.ஏ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுடன் ஒரு விசிட் அடித்தோம்.

'வாங்க பசங்களா... இந்த வானிலை ஆய்வு மையத்தில் என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்க வந்து இருக்கிற உங்க எல்லோருக்கும் வணக்கம்' என்று வரவேற்று, கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்துச் சென்றார், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன்.
...

'இந்த மானிட்டரில் என்ன தெரியுதுன்னு பார்த்துச் சொல்லுங்க'' என்றார். எல்லோரும் அவரைச் சூழ்ந்தனர். ''அதுவா அங்கிள்... வானத்துல மேகங்கள் மூவ் பண்றது தெரியுது'' என்று சுட்டிகள் கோரஸாகச் சொல்ல, ''வெரிகுட்!'' என்று மானிட்டரில் இருக்கும் உலக வரைபடத்தைக் காட்டினார்.

''இது கையால் வரைந்த படம் கிடையாது. சாட்டிலைட் மூலமாக எடுத்த படம்'' என்றார். ''அங்கிள், சாட்டிலைட்பத்தி விவரமாச் சொல்லுங்க' என்று பிரபாகரன் கேட்டான்.

'சாட்டிலைட்னா செயற்கைக்கோள். வானத்தில் இருந்து நமக்குத் தேவையானவற்றை எல்லாம் புகைப்படங்களாக எடுத்துத் தருவதற்காக இங்கே நாங்க செயற்கைக்கோளைப் பயன்படுத்துகிறோம்'' என்று விளக்கம் தந்தார் ரமணன்.

பிறகு, பூமியின் மேற்பரப்பில் எத்தனை டிகிரி வெப்பத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று உலக வரைபடத்தைக் காட்டி விளக்கினார்.

'மழை வரப்போகுதுன்னு எப்படி நீங்க முன்னாடியே சொல்றீங்க?' என்று முக்கியக் கேள்வியைக் கேட்டான் ஜெயராமன்.

'இதோ இந்த வரைபடத்தைப் பாருங்க... குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை இப்போ ஜப்பான் அருகில் இருக்கு. இதனால் ஜப்பான், வடகொரியா மற்றும் தென் கொரியாவில் மழை பெய்யும். இது ஒரே இடத்தில் இருக்காது. காற்று மற்றும் வெப்பச் சலனத்துக்கு ஏற்ப மாறிட்டே இருக்கும். இது வேறு திசைகளுக்கு நகர்வதால் மழை வாய்ப்பும் வேறு இடங்களுக்கு மாறும். இப்படிதான் மழை வருமா? வராதான்னு சொல்வோம்'' என்று விளக்கம் தந்தார்.

''வரும்... ஆனா வராதா அங்கிள்?'' என்று கலாய்த்த பிரபாகரிடம்...

''இப்ப எல்லாம் நாம் நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறோம். அதனால், வரும்ன்னா வரும்தான்'' என்று அழுத்தமாகச் சொன்னார் ரமணன்.

(சுட்டி விகடன் - 30.9.2012)

No comments:

Post a Comment