Thursday, October 25, 2012

பவர்கட் பிரச்னையா...இன்றே சோலாருக்கு மாறுங்க !





'பவர் கட் பிரச்னை, விரைவில் தீர்ந்துவிடும்' என்கிற நம் நம்பிக்கைதான், தீர்ந்துகொண்டே வருகிறது. ஒரு நாளைக்கு 3 மணி நேரம் என்று
ஆரம்பித்தது... இன்று 12 மணி நேரம்... 16 மணி நேரம்... 18 மணி நேரம் என அதிகரித்துக் கொண்டே போகிறது. 'இனி, அரசாங்கத்தை நம்பி பலனில்லை' என்று உணர்ந்த மக்கள்,
'இன்வர்ட்டர்'களை வாங்கினார்கள்.ஆனால்..., அந்த இன்வர்ட்டரில் சேமிக்கும் அளவுக்கான மின்சார சப்ளைகூட இல்லாத நிலையில்,
அதுவும் பல வீடுகளில் பயனற்றுக் கிடக்கிறது.
மாற்று வழியாக, சூரிய ஒளி மூலம் அவரவர் வீடுகளுக்கான மின்சாரத்தை அவரவர்களே தயாரித்துக் கொள்ளும் சோலார் முறையை அரசாங்கம்
பரிந்துரைத்து, மானியமும் வழங்குவதாக அறிவித்திருப்பது உருப்படியான யோசனை. இதையடுத்து, அங்கொன்று... இங்கொன்று என்று சில வீட்டு
மாடிகளில் மின்னுகின்றன சோலார் தகடுகள்.'பவர் இருந்தாலும் இல்லைனாலும் எங்க வீட்டுல பிரச்னை இல்லைங்க...’ என்று அதை
உபயோகிப்பவர்கள் சர்டிஃபிகேட் தருகிறார்கள். மக்கள் மத்தியில் சோலார் பிளான்ட் மூலம்மின்சாரம் தயாரிக்கும் முறை பற்றிய
விழிப்பு உணர்வு பெருக ஆரம்பித்திருக்கும் நிலையில், அதுகுறித்த விவரங்களைப் பெற, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை
அலுவலகத்துக்குப் படையெடுத்தோம். அங்கே நம்மை எதிர்கொண்ட துணைப் பொதுமேலாளர் (சூரிய சக்தி அறிக்கை பிரிவு) சையத் அகமத்,
நமக்கு விளக்கங்களைத் தந்தார்.
''மின்பற்றாக்குறை பற்றிய புலம்பல்கள், புகார்களைவிட... மாற்று ஏற்பாடுகளுக்கு மக்கள் தயாராக வேண்டிய சூழல் இது! பூகோள அமைப்பின்
சாதகத்தால்,தமிழ்நாட்டில் சூரிய சக்தி அதிகளவில் கிடைக்கிறது. அதைக்கொண்டு மின்சாரம் பெறுவது நல்ல யோசனை. மக்களிடம்
அந்த முயற்சியை முன்எடுப்பதற்கான தயக்கம் இருப்பதற்குக் காரணம்...அதற்கு தேவைப் படும் அதிகப்படியான ஆரம்ப கட்ட முதலீடுதான்.
அதனால்தான் மத்திய அரசாங்கம் அதற்கு அதிகபட்சம் 40 சதவிகிதம் வரை மானியம் வழங்க முடிவெடுத்துள்ளது.
ஒரு நாளைக்கு 4 டியூப் லைட், ஒரு மின் விசிறி, ஒரு டி.வி, ஒரு ஏ.சி, ஒரு கம்ப்யூட்டர், சிறிது நேரம் மின் மோட்டார் என மின் சாதனங்களை
சுமார் 12 மணி நேரம் பயன்படுத்த, 1 கிலோ வாட் மின்சாரம் தேவைப்படும். இதை சூரியஒளி மூலம் பெறுவதற்கு சோலார் தகடுகள் மற்றும்
பேட்டரி என அமைப்பதற்கு சுமார் இரண்டு லட்ச ரூபாய் செலவு பிடிக்கும். மானியமாக 81 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும்.
மீதமுள்ள 1.19 லட்சத்தை நீங்களே செலவு செய்ய வேண்டும்.நல்ல திட்டம் நோக்கி நாடே நகரட்டும்!சோலார் தரும் லாபம்!
மின் சாதனங்களின் ஒரு மணிநேர தேவைக்கான மின்சாரம்... டியூப் லைட்: 40-60 வாட்ஸ், சீலிங் ஃபேன்: 60-80 வாட்ஸ், டேபிள் ஃபேன்: 80-100 வாட்ஸ்,
டி.வி: 150-250 வாட்ஸ்,எல்.சி.டி. டி.வி: 150-250 வாட்ஸ், டி.வி.டி: 40-60 வாட்ஸ், கம்ப்யூட்டர் சி.பி.யூ: 150-200 வாட்ஸ், மானிட்டர்: 100-150 வாட்ஸ்,
செல்போன் சார்ஜர்: 5 வாட்ஸ்.
----------------------------------------------------------------------
மேற்கூறிய மின்சாதனங்களின் அதிகபட்ச மின்தேவையை வைத்து ஒரு மணி நேரத்துக்குக் கணக்கிட்டால் மொத்தம் 1,155 வாட்ஸ் ஆகிறது.
இதற்காக நாம் செலுத்தும் மின்கட்டணம்1 ரூபாய் 15 பைசா (யூனிட்டுக்கு குறைந்தபட்ச கட்டணம் 1 ரூபாய்). இதையே 12 மணி நேரத்துக்குக்
கணக்கிட்டால்... சுமார் 14 யூனிட்கள் வரும். இரண்டு மாதங்களுக்கு (60 நாட்கள் கணக்கிட்டால்...) 840 யூனிட்கள் வரும்.
இதற்கான கட்டணம்... 3,745 ரூபாய் 25 பைசா (1 முதல் 200 வரையிலான யூனிட்களுக்கு 3 ரூபாய்; 201 முதல் 500 வரையிலான யூனிட்களுக்கு
4 ரூபாய்: 501 முதல் 5 ரூபாய் 75 பைசா என கணக்கிடப்படுகிறது).இருபது ஆண்டுகளுக்கு கணக்கிடும்போது...
4 லட்சத்து 49 ஆயிரத்து, 430 ரூபாய். ஆனால், முதல் கட்டமாக 1 லட்சத்து 19 ஆயிரம் ரூபாயை செலவிட்டு சோலாருக்கு மாறிவிட்டால்...
'அடேங்கப்பா... நான் கரன்ட் பில்லே கட்டுறது கிடையாது' என்று தெம்பாக காலரை தூக்கிவிட்டுக் கொள்ளலாம்...
மின்வெட்டு என்கிற பிரச்னையும் இருக்காது.
--------------------------------------------------------------------
சூரிய மின்சாரம்... அசத்தும் குஜராத்!
ஆசியாவிலேயே மிக அதிகமான மின்சாரத்தை சூரிய ஒளி சக்தியின் மூலம் தயாரிக்க சோலார் பார்க் ஒன்றை 3,000 ஏக்கர் பரப்பளவில்
உருவாக்கியுள்ளது குஜராத் அரசாங்கம். ஸ்வாத் பாலைவனத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சோலார் பார்க்கிலிருந்து 214 மெகா வாட்
மின்சாரம் பெற முடியும். சீனாவில் உள்ள சோலார் பார்க்கில் 200 மெகா வாட் அளவே மின் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது,
குறிப்பிடப்பட வேண்டிய ஒப்பீட்டுத் தகவல்.


No comments:

Post a Comment