Monday, December 8, 2014

உங்கள் கண்களை குளமாக்கும்...இந்த கதை.. அரவிந்தன் ராஜகோபாலன்.



உங்கள் கண்களை குளமாக்கும்...இந்த கதை..

நான் என்னை முழுமையாக கொடுக்கத்தான் ஆசைப்படுகிறேன் ஆனால் என் உடல் இருக்கும் நிலையில் நான் என் கண்களை மட்டும்தானே தானம் செய்யமுடியும், ஆகவே மறக்காமல் என் கண்களை தானம் செய்துவிடுங்கள் என்று சொல்லி கண்களை தானம் செய்துள்ளான் ஒரு சிறுவன்.

சென்னை குன்றத்துார் பகுதியைச் சேர்ந்த லட்சுமி நரசிம்மன்-உமா தம்பதியினர் ஒரே மகன் அரவிந்தன் ராஜகோபாலன்.

திருமணமாகி நீண்ட வருடத்திற்கு பிறகு பிறந்த பிள்ளை என்பதால் பெற்றோர் இருவரும் பாசத்தை கொட்டி வளர்த்தனர்.

மிகுந்த புத்திசாலித்தனத்துடனும் மிதமிஞ்சிய தெய்வபக்தியுடனும் வளர்ந்த அரவிந்தன் நான்காம் வகுப்பு படிக்கும் போது நடக்கமுடியாமல் சிரமப்பட்டான்.மருத்துவமனைகள் மீதான படையெடுப்பிற்கு பிறகு கடைசியில் அரவிந்தனுக்கு மஸ்குலர் டிராபி எனப்படும் தசைசிதை நோய் வந்துள்ளது அறியப்பட்டது.

துடித்துப்போன பெற்றோர் சகலவிதமான வைத்தியங்களை முயற்சித்தும் தோல்வியே கண்டனர்.ததைசிதை நோய்க்கு உலகத்தில் மருந்தே இல்லை என்பதையும் புரிந்து கொண்டனர்.

இந்த நோய் வந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உடல் தசை எலும்புகள் பலமிழந்து செயலிழந்து போய்விடும் படுக்கையிலேயே இருக்கவேண்டும் நோய்வந்த பத்து அல்லது பனிரெண்டு ஆண்டுகளுக்குள் மரணம் சம்பவித்துவிடும் அதுவரை சக்கர நாற்காலியில் யாருடைய துணையுடனாவது போய்வரவேண்டும்.

அரவிந்தனுக்கு இதெல்லாம் தெரியாது. ஏம்மா என்னால நிற்க முடியல, நடக்க முடியல நான் நிற்காட்டியும் நடக்காட்டியும் பரவால்லே ஆனால் படிக்கணும்மா பள்ளிக்கூடத்திற்கு கூட்டிட்டு போங்கம்மா என்று கெஞ்சவே அடுத்து ஆறாம் வகுப்பு வரை சக்கர நாற்காலியில் அரவிந்தனை பள்ளிக்கு கூட்டிப்போய் கூட்டிவந்தனர்.

இதன் காரணமாகவே அரவிந்தனின் அம்மா தான்பார்த்த வேலையை விட்டுவிட்டார் அப்பா தொழிலை மாற்றிக்கொண்டார்.

இருந்தபோதும் அரவிந்தனின் பள்ளி வாழ்க்கை சுலபமானதாக இல்லை சக்கர நாற்காலியில் இருந்து குனியும் போது விழுந்தால் எழமுடியாது, விழுந்த வேகத்தில் எலும்புகள் உடைந்துவிடும், வலி உயிர்போகும். டாக்டர்களிடம் துாக்கிக்கொண்டு ஒடினால் சிறு தும்மலைக்கூட தாங்காத உடம்பும்மா வீட்டில் வைத்தே பார்த்துக்கொண்டால் இறப்பை தள்ளிப்போடலாம் என்று சொல்லிவிட்டனர்.

இதயத்தை இரும்பாக்கிக்கொண்டு அரவிந்தன் பள்ளிக்கு போகும் ஆசைக்கு முற்றுப்புள்ளிவைத்தனர். ஏம்மா என்று கேட்டபோது நான் உனக்கு அம்மா மட்டுமல்ல ஆசிரியராகவும் இருந்து பாடம் சொல்லித்தர்ரேன் நீ ஏன் கவலைப்படறே என்று உள்ளுக்குள் அழுதாலும் அரவிந்தனிடம் சிரித்துக்கொண்டே சொல்லி சமாளித்திருக்கிறார்.

வீட்டில் இருந்தாலும் அரவிந்தன் சும்மாயிருக்கவில்லை டி.வி, லேப்டாப், மொபைல், பேஸ்புக், இண்டர்நெட் என்று எல்லாவிதத்திலும் கில்லாடியாக விளங்கினான்.

தன் மகன் வெறுமையாக உணர்ந்துவிடக்கூடாது நிறைய பிள்ளைகள் வீட்டிற்கு வந்து பையனிடம் பேசட்டும் என்பதற்காக வீட்டில் ட்யூஷன் எடுத்தார். அப்படிவரும் பிள்ளைகளுக்கு இந்தியில் நிபுணத்துவம் பெற்ற அரவிந்தன் இந்தி பாடங்களையும் அந்த பாடங்களில் வரும் சந்தேகங்களையும் சொல்லித்தருவான்.காலை மாலை வேளைகளில் உடம்பில் பட்டை பட்டையாய் விபூதி பூசிக்கொண்டு ருத்ரம்,சமஹம்,ஸ்ரீசத்தம் என்று தொடங்கி துர்கா சத்தம் வரையிலான ஸ்லோகங்களை சுத்தமாக மனப்பாடமாக சொல்லி சாமி கும்பிடுவான்.

இப்படி பார்த்துக்கொண்டாலும் அரவிந்தனுக்குள் இருந்த தசைசிதை நோயின் வளர்ச்சியும் அசுரத்தனம் அடைந்து கொண்டுதான் இருந்தது. காலில் ஆரம்பித்தது கொஞ்சம் கொஞ்சமாக எலும்புகளையும் உள்உறுப்புகளையும் சிதைத்து கழுத்துவரை செயல்பாடுகளை இழக்கச் செய்தது.

இருந்தாலும் தன்னைப்பற்றி கவலைப்படாமல் ஆப்பிரிக்காவில் எபலோ நோயால் இறந்தவர்களுக்காகவும், நமீபியாவில் வெள்ளத்தால் இறந்தவர்களையும் செய்தி மூலமாக தெரிந்து கொண்டு கவலைப்படுவான் கண்ணீர்விடுவான்.

ஒரு நாள் திடீரென தன் தாயாரை அழைத்து அம்மா நான் நடக்கமுடியாம ஒரே இடத்தில் உட்கார்ந்து இருந்தாலும் உலகத்தில் நடக்கிற எல்லா விஷயங்களையும் என் கண்ணால பார்க்கமுடிகிறது ஆனால் இந்த கண்களும் இல்லாம எவ்வளவு பேர் கஷ்டப்படுறாங்க நான் முடிவு செய்திட்டேம்மா என் கண்களை தானமா கொடுத்திடுங்கம்மா என்று சொல்லியிருக்கிறான்

அதெல்லாம் ஏம்ப்பா இப்ப சொல்லிக்கிட்டு என்று சொல்லிய தாயாரின் கைகளிலேயே சாய்ந்து விழ ஆஸ்பத்திரிக்கு துாக்கிக்கொண்டு ஒடியிருக்கின்றனர்.கடுமையான நுரையீரல் தொற்று என்று சொல்லி ஐசியுவில் வைத்துள்ளனர்.

கண்விழித்து பார்த்த அரவிந்தன் அம்மா அருகில் அழுதுகொண்டு இருப்பதை பார்த்து ஆஸ்பத்திரின்னா இப்படித்தான் இருக்கும் ரொம்ப பயமா இருந்துச்சுன்னா நான் சாதாரண வார்டுக்கு மாறிக்கவா என்று சொல்லி அம்மாவை சமாதானப்படுத்தியிருக்கிறான்.

இப்படி உற்சாகமாக பேசிய அரவிந்தனை வீட்டிற்கு டிஸ்சார்ஜ் செய்துகூட்டி வந்ததும் இன்னும் நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக வீட்டையே ஆஸ்பத்திரியாக மாற்றிவைத்தனர்.

இந்த நிலையில்தான் ஆஸ்பத்திரியில் இருந்து அழைப்பு வந்தது ஒடோடிப்போன தாயாரின் கையை பிடித்துக்கொண்டு அம்மா உங்கிட்டே இரண்டு விஷயம் சொல்லணும்னு நினைச்சேம்மா உன்னை மாதிரி அம்மாவும் அப்பாவும் எனக்கு கிடைக்கமாட்டாங்க நான்தான் உங்ககூட இருக்கமுடியாம போயிடுச்சு ஆனாலும் திரும்பவும் உங்க பிள்ளைய பிறந்து ஆரோக்கியமான குழந்தையா வளர்ந்து உங்களை பார்த்துக்குவேன்.இரண்டாவது என் உடம்புல கண்ணு மட்டும்தான் மத்தவங்களுக்க தர்ரமாதிரி உருப்படியா இருக்கு அதுனால அதை மறக்காம கொடுத்துடுங்கம்மா என்று அம்மாவின் கைகளை பிடித்து சொன்ன அரவிநÍதனுக்கு அதுதான் கடைசி வார்த்தை.

இப்படி ஒரு பாசமான பண்பான சமூக அக்கறை உள்ள பிள்ளைய கொடுத்த இறைவன் அதுகூட வாழத்தான் கொடுத்துவைக்கலை ஆனா அந்த குழந்தையோட ஆசையாவது நிறைவேற்றி வைப்போம்னு நினைச்சு உடனே சங்கர நேத்திரலயாவிற்கு போன் செய்ய அவர்களும் வந்து அரவிந்தனின் கண்களை எடுத்துச்சென்றனர்.

இதெல்லாம் நடந்தது கடந்த நவம்பர் -17 ந்தேதி அன்றுதான் புதுச்சேரி மதர் மகாசமாதி அடைந்த தினமுமாகும்.

இது நடந்து சில நாட்களுக்கு பிறகு அரவிந்தனின் தாயாருக்கு ஒரு போன் உங்க பையன் அரவிந்தனின் கண்கள் இரண்டு பேருக்கு பொருந்திவிட்டது இப்ப உங்க பையன் புண்ணியத்தில் இரண்டு பேர் உலகை பார்க்க போகிறார்கள் என்று.

No comments:

Post a Comment