Thursday, April 25, 2013

பழநிபாரதி

பேசத் தொடங்கிவிட்டோம்
எங்கள் வார்த்தைகள்
நாறத்தான் செய்யும்

வாய் நாற்றமல்ல அது
வலுக்கட்டாயமாய் எம்
வாய்திறந்து ஊட்டிய
உங்கள் ஆணவ மலத்தின்
துர்நாற்றம்

நாங்கள்
உங்கள் நிலங்களை
உழுதோம்

நீங்கள்
எங்கள் பசியை
அறுவடை செய்தீர்கள்

அந்த நிலமும்
எங்களுடையதுதானென்பது
அப்போது எங்களுக்குத் தெரியாது

உங்கள் அடுப்புகள் எரிய
விறகுகள் வெட்டினோம்

நீங்கள்
எங்கள் குடிசைகளை
எரித்தீர்கள்

கோடரிகளும் ஆயுதமென்பதை
அப்போது நாங்கள்
அறிந்திருக்கவில்லை

உங்கள் பெண்களின்
தீட்டுத் துணிகளையும்
துவைத்துக்கொடுத்தோம்

நீங்கள்
எங்கள் பெண்களின்
நிர்வாணத்தையும் கிழித்தீர்கள்

அப்போது எங்களுக்குத் தெரியாது
கருத்த தோலே எங்களின்
கனத்த ஆடையென்று

வாழ்வின்
கூட்டல் கழித்தல் கணக்குப் போட
எங்கள் முதுகு உங்களுக்குக்
கரும்பலகையானது

அப்போது எங்களுக்கு
எழுதப் படிக்கத் தெரியாது

இப்போது நாங்கள்
படிக்கத் தொடங்கிவிட்டோம்
எழுத்துக்களைக் கூட்டி மட்டுமல்ல
எங்களையும் கூட்டி

செத்துப்போன
மாட்டின் தோலையும்
அதிர...அதிர
நியாயம் கேட்கவைக்கும்
பறையின் குரல்
எங்களுடையது

நாங்கள்
பேசத் தொடங்கிவிட்டோம்

-பழநிபாரதி

No comments:

Post a Comment