Friday, January 2, 2015

ரூபி ஆன் ரயில்ஸில் ப்ரோகிராம் எழுதுவதைப் போலவே மகிழ்ச்சியான சவால்கள்.



மழையோடு புத்தாண்டு தொடங்கியது. தொடர்ந்து பயணத்தில் இருந்ததால் எந்த புத்தகத்தை எந்த சில்லுன்டி எரித்தார் என்று கவணிக்கவில்லை. நேற்று ஒசூரின் குளிர் வீடு திரும்பியதை உணர்த்தியது.
நான் வளர்த்த கீரைகள் அறுவடைக்கு தயாராக இருக்கின்றன. இயற்கை விவசாயமெல்லாம் வேலைக்காதுங்க, அது மேல்தட்டு மக்களுக்கு மட்டும் தான், என்று ஒசூரில் ஒரு பள்ளியின் காரியதரிசி தொடர்ந்து என்னை எரிச்சல் படுத்தியதால், "நெலத்த குடுய்யா முதல்ல" என்று வீம்புக்கு இறங்கி விவசாயம் செய்தேன். நாற்பது சென்ட் நிலத்தில், கீரை விதைகளுக்கான செலவு ஆயிரம் ருபாய். தினமும் நூறு கட்டு அறுப்பதாக திட்டம். சென்ற வருடம் கொடுத்த இயற்கை உரங்கள் மண்ணை வளப்படுத்தி இருந்ததால், உரங்கள் எதுவும் இடவில்லை. பள்ளிக்கூடத்திலேயே அத்தனையும் விற்க முடியும். பெரிய செலவு இல்லாமல் தொடர்ந்து வருமானம் வரும் என்று விளக்கிச் சொல்லி, வர்ற காச நீங்களே வச்சு கோயில் கட்டுங்கப்பா! என்று சொல்லி கொஞ்சம் காய்கறிகளை உற்பத்தி செய்து வேலையாட்களுக்கு பயிற்சி அளித்து விலகிக்கொண்டேன்.
என் கவனம் முழுவதும் aquaponics பரிசோதனையில் நிற்கிறது. விளைச்சலும் கிட்டத்தட்ட எதிர்பாத்த அளவுக்கு உள்ளது. பூச்சி புழு இல்லாத ஆர்கானிக் காலிஃப்ளவர், நாட்டு பாகற்காய், பாலக்கீரை, தக்காளி செடிகளை காண்க. இனி இதன் விரிவாக்கத்தை கல்லுப்பட்டியில் பாமயன் பண்ணையில் நிகழ்த்த திட்டம். சில சவால்கள் இருக்கின்றன. தினமும் 10 கிலோ மண்புழுக்கள் மற்றும் ஐந்து கிலோ கருஞ்சிப்பாய் ஈக்களை உற்பத்தி செய்து மீனுக்கு உணவாக உற்பத்தி செய்வது. மேலும் பொருளாதார முன்மாதிரிகளை உருவாக்குவது என்று பல சவால்கள். ஆனாலும் ரூபி ஆன் ரயில்ஸில் ப்ரோகிராம் எழுதுவதைப் போலவே மகிழ்ச்சியான சவால்கள்.

No comments:

Post a Comment